பெற்றோர் மற்றும் பெரியவர்கள் பாதத்தில் விழுவது நம் நாட்டில் பரவலாக காணப்படும் கலாச்சாரங்களில் ஒன்றாகும். காரியம் ஆக வேண்டுமானால் யார் காலிலும் விழத் தயார் என்பது இன்றைய நாட்களில் சகஜமானதும் ஆகும். ஆனால் வேதத்திலே மரியாள் அறிந்து வைத்திருந்த பாதம் அது இயேசுவின் பாதம் ஒன்றே என்றால் அது மிகையாகாது. மூன்று முறை அவள் இயேசுவின் பாதத்தைக் கண்டாள். அம்மூன்று முறையும் அவள் செயல்கள் உணர்த்திய மூன்று உண்மைகளை இக்கட்டுரையில் காண்போம்.
கற்றுக் கொள்ளும் அடையாளமாக இயேசுவின் பாதத்தில் அமர்ந்தாள் (லூக்கா 10:38-42)
இச்சம்பவத்தில் மார்த்தாள், இயேசுவையும் அவருடைய சீடர்களையும் போஷிக்க பற்பல சமையல் வேலைகளைச் செய்து தன்னை வருத்திக் கொண்டிருந்தாள். மற்றும் அனைவருக்கும் எப்படி பரிமாறுவது என்று அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டும் கலங்கினாள். ஆனால் அவள் சகோதரியான மரியாளோ இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய போதனையை கேட்டுக் கொண்டிருந்தாள். இவ்விருவர் செயல்களிலும் எது முக்கியம் என்ற பிரச்சனை எழுந்த போது, இயேசு மரியாளின் செயலை, "தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக் கொண்டாள்," என்று மெச்சிக் கொள்ளுகின்றார்.
மரியாள் வாழ்ந்து வந்த காலம், "அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?" என்னும் கூற்றுப் போல, "இறை வார்த்தையை பெண்களுக்கு கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு தவறான காரியங்களைப் போதிப்பதற்கு சமம்," என்று யூத ரபியான எலியேசர் எழுதி வைத்திருந்த காலமாகும். இந்நிலையில் குருவின் பாதத்தில் அமர்ந்து கற்றுக் கொள்ளும் ஆண் சீடர்களுக்கு இணையாக மரியாள் இறையியல் கற்றுக் கொண்டதும் இயேசு அவளை மெச்சிக் கொண்டதும் ஆண்களோடு சேர்த்து பெண்களுக்கும்இறைக் கல்வியின் அவசியத்தை உயர்த்திக் காட்டுகின்றது!
விசுவாசத்தின் அடையாளமாக இயேசுவின் பாதத்தில் விழுந்தாள் (யோவான் 11)
இவ்விரு சகோதரிகளின் சகோதரனான லாசரு மரித்து விட்டான். உடனே மார்த்தாள் இயேசுவைக் காண ஓடுகின்றாள். மரியோளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். ஆனாலும் மரியாள் இயேசுவின் அழைப்பின் பேரிலே சீக்கிரமாய் எழுந்து அவர் பாதத்தில் விழுகின்றாள். மார்த்தாள் பதறுகின்றாள். "கல்லை எடுத்துப் போடுங்கள்," என்ற இயேசுவிடம், சற்று முன்பு, "ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவக்குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்," என்று விசுவாச அறிக்கையிட்டவளான மார்த்தாள், "நாறுமே, நாலு நாளாயிற்றே" என்று பதறுகின்றாள்.
வாயினால் விசுவாச அறிக்கை செய்த மார்த்தாள் தன்னுடைய பதற்றத்தின் மூலம் அவிசுவாசத்தை வெளிப்பத்தினாள். மரியாளோ "விசுவாசிக்கிறவன் பதறான்," என்னும் வசனத்திற்கு இணங்க பதறவில்லை. "விசுவாசம் கேள்வியினால் வரும். கேள்வி தேவனை அறிகிற அறிவினாலே வரும்" என்னும் வசனத்திற்கு மரியாளின் வாழ்வு சான்றன்றோ? அவள் வசனத்தைக் கேட்டாள். விசுவாசித்தாள். பதறவில்லை. அந்த விசுவாசத்தின் அடையாளமாக இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். மார்த்தாள் விசுவாசத்தை நாவினால் ஒத்துக் கொண்டாள். பிசாசுகளும் தேவன் உண்டென்று விசுவாசித்து நடுங்குவது உண்மையானால், (யாக்கோபு 2:19) வெறுமனே ஒத்துக் கொள்வது விசுவாசமல்ல, மரியாளைப் போல ஒப்படைப்பதே விசுவாசம். அங்கே அற்புதம் நடைப்பெற்றது. இயேசு லாசருவை உயிரோடே எழுப்பினார்.
அன்பின் அடையாளமாக இயேசுவின் பாதத்தை அபிஷேகித்தாள் (யோவான் 12:1-8)
மரித்த லாசருவை அற்புதமாக திரும்பப் பெற்ற இக்குடும்பத்தினர் மீண்டும் இயேசுவிற்கு விருந்துக் கொடுத்தனர். மார்த்தாள் வழக்கம் போல சமைக்கவும்,பரிமாறவும் தொடங்கினாள். "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு கூறுவாயாக," என்னும் அறிவைப் பெற்றிருந்த மரியாளோ, விருந்தில் உட்கார்ந்திருந்த இயேசுவின் பாதத்தைப் பார்க்கின்றாள். இயேசுவின் மரணத்தையும் அதன் நோக்கத்தையும் அறிந்து வைத்திருந்த மரியாள், ஒரு கணம், அன்பினால் நெகிழ்ந்து, அவர் பாதத்தை அபிஷேகிக்க விரும்பினாள். யூதப் பெண்கள் பொதுவாக கழுத்தில் கட்டி தொஙக வைத்திருக்கும் அந்த விலையுயர்ந்த தைலத்தை அவர் பாதத்தில் பூசினாள். அதை துடைக்க அவள் துண்டை தேடி ஒட வேண்டுமே! அதனால் அவள் தலை மயிரால் அவர் பாதத்தைத் துடைக்க ஆரம்பித்தாள். பல விதமான ஏளனச் சொற்கள் அவ்வமயம் எழுந்தது. இயேசுவோ மரியாளின் செயலைப் பாராட்டுகின்றார். விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூனறிலும் அன்பே பெரியது என்பதை அறிந்த மரியாள் அன்பின் அடையாளமாக இயேசுவின் பாதத்தை அபிஷேகித்தாள்.
சரியான இறை அறிவு, செயல் வடிவிலான விசுவாசத்தையும், அன்பையும் மரியாளில் தூண்டியது. நம் வாழ்வில் இறை அறிவை பெற்றுக் கொள்ளும் அடையாளங்கள் என்ன? விசுவாசத்தின் அடையாளங்கள் என்ன? அன்பின் அடையாளங்கள் என்ன என்பதை சிந்தித்து செயல்பட்டால் சிலுவையில் ஆணிகள் கடாவப்பட்ட இயேசுவின் பாதத்தை நாமும் பரலோகத்தில் நம் நிஜக் கண்களால் கண்டு, வீழ்ந்து, முத்தம் செய்யலாமே!




