Friday, June 23, 2017

மிஷனரிக் கண்ணாடித் தொடர்: சுவிசேஷ இரதம்

நம் மிஷனரிக் கடவுள் விரும்பிப் பயணிக்கும் வாகனம் எதுவாயிருக்கும்? நம் ராஜாதி ராஜாவாம் கர்த்தரை நான் இரதம் ஒன்றில் பிரயாணிப்பது போல் கற்பனை செய்து பார்க்கிறேன். மிஷனரிக் கண்ணாடியை அணிந்து கொண்டு ஆதியாகமப் புத்தகத்தின் கடைசிப் பக்கங்களிலுள்ள யோசேப்பின் வாழ்விலிருந்து இக்கட்டுரையைத் தொடர்கிறேன்.

இரதம் இழுக்க, மனிதர்
யோசேப்பு யேகோவா வணக்கம் இல்லாத எகிப்திற்கு அவன் சகோதரரால் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு, மாற்றுக் கலாச்சார‌ சூழலில் வாழ நேர்ந்தது. ஆனால் சர்வ வல்ல தேவனுக்கு அந்த நாளின் முதன்மை நாடாகிய எகிப்து அவரைக் குறித்த அறிவை, தாம் தெரிந்துகொண்ட ஆபிரகாமின் கொள்ளுப்பேரனான யோசேப்பின் வாழ்வின் மூலம் அறிந்துகொள்ளும் உன்னத நோக்கம் இருந்தது.

யோசேப்பு எகிப்தில் தன்னுடைய‌ எல்லா நிலைமைகளிலும் நல்லுறவுகளைக் கட்டி எழுப்பினான். தேவன் தேச ஆளுமையில் அவனை உன்னதமான இடத்திற்கு உயர்த்தினார். உணவிற்காக முழு எகிப்தும், கானானும், அண்டைத் தேசங்களும் அவனைத் தேடி வந்தனர். அவன் ஞானத்தின் மூலம் தேவ நாமம் மகிமைப்பட்டது. இன்றும் நாம் செய்யும் எந்தத் தொழிலும்' நற்செய்தியைப் வல்லமையாய்ப் பரப்பும் பிரசங்க பீடம் ஆகும். நாம் எந்த அளவிற்கு அதைப் பயன்படுத்துகிறோம்?

கானானியப் பெண்ணான தாமாரோடு யூதா தவறான உறவு (ஆதியாகமம் 38) வைத்த சம்பவத்திலும், இந்த‌ வம்ச வழி வந்த இறைமகன் இயேசுவின் வேரைக் காண்கிறோம் (மத்தேயு 1:1 3). நம் வேதம் கூறும் மதம் ஒர் வம்சத்திற்கு மட்டுமே உரியது அன்று என்பது புலனாகிறது. தேசங்களை ஆளும் ஆசீர்வாதம், யாக்கோபால் மகன் யூதாவிற்குத் தீர்க்கமாக உரைக்கப்பட்ட ஒன்றாகும் (ஆதியாகமம் 49:10). யூதா கோத்திரத்தை ஆசீர்வதித்து அதன் வழி வந்த இரட்சகர் இயேசுவின் மூலம் முழு உலகையும் ஆசீர்வதிப்பது இறை நோக்கமாயிருந்தது. சுவிசேஷ இரதத்தை இழுக்கும் பணி மனிதருக்கும், மனிதக் கூட்டங்களுக்குமேயாகும். மனித‌ வாழ்வின் நன்மை, தீமையான சம்பவங்களில் இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறவராகவே இருக்கிறார்.

இரதம் இழுக்க, தேசங்கள்
யாக்கோபின் 12 புத்திரர் பலுகிப் பெருகி ஒரு நாடாக மாறினார்கள். தன் சுவிசேஷ இரதத்தை இழுக்க தேவன் மனிதரை மாத்திரமல்ல, இஸ்ரவேல் என்னும் இந்த மக்கள் கூட்டத்தையும் பயன்படுத்தியதை யாத்திராகமப் புத்தகம் முதல் காணலாம். மோசேயும் சுவிசேஷ ரதத்தை இழுத்தவனே. சர்வ வல்லவர் அவனை முன்கூட்டியே பார்வோன் குமாரத்தியின் அரண்மனையில் இரண்டு கலாச்சார சூழலில் வளர வைத்து இஸ்ரவேலரின் தூதுவனாக எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடமே அனுப்பினார். மோசே ஒரு மிஷனரியைப் போன்றே இறைவனால் அருட்பொழிவைப் பெறுகின்றான் (யாத்திராகமம் 3:14). இந்த அழைப்பில் வந்த சவால்களை அவன் மேற்கொள்ள வேண்டியிருந்தது (5:1-2). இந்த மோசேயை முன்னணி நாடாகிய எகிப்திற்கு மாத்திரமல்ல, இஸ்ரவேலர் விடுதலைப் பயணத்தில் சந்தித்த எல்லா ராஜ்ஜியங்களுக்கும் தேவன் தன் நாமத்தை பறைசாற்ற பயன்படுத்தினார். பத்து வாதைகள், உச்சக்கட்ட செங்கடலின் சம்பவம் போன்றவை உலக நாடுகளின் பார்வையை இஸ்ரவேலரின் தேவனுக்கு நேராய் இழுத்தது.

மாற்றுக் கலாச்சாரத்தில் பணிபுரிய இறைவன் கொடுக்கும் அழைப்பு பல சவால்களை உள்ளடக்கியது. எனினும்  இறுதியில் தேவன் வெற்றி சிறப்பார். அவர் நாமம், அவரைப் பற்றி அறியாத மக்களால் உயர்த்தப்படும்.  அருட்பணியை மையப் பகுதி விசை, மைய விலக்கு விசை என்று இரு விதமாகக் கூறலாம். மனுக்குலத்தை தேவனை அறியும் அறிவிற்காக‌ தனி மனிதன், அல்லது ஒரு இடத்திற்கு நேராக இழுக்கலாம். அல்லது மனிதரை நோக்கி அவர்தம் இடங்களுக்குச் செல்லலாம். எந்த வித‌ இரதம் இழுக்கும் பணியில் நாம் இருக்கிறோம்? மேலும் தேசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு , சுவிசேஷ ரதத்தை இழுக்க கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்த்தத்தம் சங்கீதம் 33:12ல் உள்ளது: கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

இரதம் இழுக்கத் தெரிவு ‍
நம் தேவன் பயணிக்கும் இரதமானது எல்லாத் தேசங்களுக்கும் அவர் மகிமையை எடுத்துச் செல்லும் சுவிசேஷ இரதமாகும். இஸ்ரவேலரின் வரலாற்றில் நிகழ்ந்த விடுதலை பயணம் மிஷனரிப் பணியைச் செய்தது. இஸ்ரவேலரின் சரித்திரத்தில் பல தாழ்வுகள் இருந்தது. தேவன் அவர்களைத் தண்டித்தார். பல போர்களை வென்ற அவர்கள், சிலவற்றை இழக்கவும் நேர்ந்தது.

ஆனாலும் அவர்களைத் தேவன் தனித்துவப்படுத்தி, அவர்களைத் தனக்கு சொந்தமான பரிசுத்த ஜனமாக தெரிவு செய்தார். அதற்கான காரணத்தை மோசே இவ்விதம் கூறுகின்றார்: சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார். (உபாகமம் 7:6-8)

எந்த சிறப்புத் தெரிவும் நம் மேன்மையால் அன்று. கர்த்தர் ஆபிரகாமுக்கு அருளிய வாக்கிற்கு உண்மையாக இந்தத் தெரிவுகளின் மூலம் த‌ன் சுவிசேஷ யாத்திரையை நிறைவேற்றி வருகின்றார். என் மேன்மைக்காக‌ தன் ஜீவனை ஈந்த இராஜாதி இராஜாவை இரதத்திலேற்றி, அவரை அமரச் செய்து, கயிறுகளை இழுப்பது எனக்குக் கிடைத்த பேறு. நான் மட்டுமன்றல்லாது, இஸ்ரவேலைப் போன்று என் தேசத்திற்கும் இந்த சுவிசேஷ இரதத்தை இழுக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டுமன்றோ!

No comments:

Post a Comment