Saturday, March 21, 2015

நறுமணமா? துர்நாற்றமா? - நம் குடும்பங்களிலிருந்து...

நம் நாட்டிலுள்ள தற்போதைய சூழலில் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்றுத் திணறும் பெற்றோருக்கு வேதத்தில் ஆதியாகம் 34 ம் அதிகாரத்திலுள்ள தீனாளின் சரிதை பிள்ளைகளின் வாழ்வில் வேதம் எதிர்பார்க்கும் கலாச்சாரத்தைக் குறித்து வெளிச்சம் தருவதாக இருக்கின்றது. தீனாள் சீகேம் என்னும் பட்டணத்தில் அந்நிய தேசத்துப் "பெண்களைப்" பார்க்கத் தனியாகப் புறப்பட்டாள் என்று இங்கு காண்கின்றோம். எந்தப் பட்டணத்திலும் "பெண்கள்" மாத்திரம் இருப்பது இல்லை. யேகோவாவை வழிபட்டு வந்த அவளுக்கு சீகேம் பட்டணமானது விசுவாசத்திலும் கலாச்சாரத்திலும் முழுவதும் மாறுபட்ட இடமாகும்.

தீனாள், உயரிய‌ கீழ்படிதலுக்கு இலக்கணமான ஆபிரகாமின் கொள்ளுப்பேத்தி. ஆபிரகாமின் கீழ்படிதலால் அவன் மாத்திரமல்ல, அவன் வருங்கால சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை ஆதியாகமம் 12:1‍-3 ல் பார்க்கலாம். ஆபிரகாமின் சந்ததி பூமியிலுள்ளோருக்கு ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்றும், இவர்களை ஆசீர்வதிப்போர் ஆசீர்வதிக்கப்படுவர், சபிப்போர் சபிக்கப்பட்டிருப்பர் என்றும் வாசிக்கின்றோம். நாடோடிகளாயிருந்த ஆபிரகாமின் சந்ததியாரை அவரை சுமக்கும் கருவிகளாக இறைவன் வைத்திருந்தார் என்பது தான் உண்மை. அவர்களோடு சம்பந்தங்கலக்கும் யாவரும் யேகோவாவை அவர்கள் வாழ்விலிருந்து வீசும் நறுமணத்தின் மூலம் அறிந்துகொள்ளவேண்டும் என்பது அவரது திட்டம். இந்த சூழலில் தான் தீனாள் சீகேமிலிருக்கும் "பெண்களைப்” பார்க்கச் சென்றாள். அந்தப் பட்டணத்திலிருந்த சீகேம் என்னும் இளைஞன் அவளைத் தீட்டுப்படுத்தினான். தீனாள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை; அவள் யார் உதவியுமின்றித் தன்னைத் தான் காத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருக்கலாம். ஆனால் அது அவளால் முடியாமல் போனது!

தீர்மானங்களும், போராட்டங்களும்
நாமும் பல வேளைகளில் இப்பாவம் நிறைந்த உலகில் நம்மை நாமே காத்துக்கொள்ளலாம் என்று நினைத்துத் தவறிப்போனது தான் மிச்சம்! வாழ்வில் தவறுதலாக நாம் எடுக்கும் தீர்மானங்கள் மலை போன்ற போராட்டங்களுக்கு நேராய் நம்மைக் கொண்டுபோய்விடுகின்றது. அவிசுவாசியான ஒருவரோடோ, பலரோடோ சம்பந்தம் வைப்பது பற்றி வேதம் இவ்விதம் கூறுகின்றது: "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? விசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?" (2 கொரிந்தியர் 6:14-15) இந்நிலையில் நாம் சரியாகத் தெரிவுசெய்வதுக் குறித்து கர்த்தர் சொல்வது என்ன? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என்
கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” (சங்கீதம் 32:8). வேதமே நமக்கு வெளிச்சம்.

தீனாளைத் தீட்டுப்படுத்தினபின் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக அந்த வாலிபன் கூறினான். பாவம் தீனாள்! 23 ம் வசனத்தை நோக்குங்கால், அவன் தீனாளுடைய தகப்பன் வீட்டு ஆடுமாடுகள், ஆஸ்திகள், மிருகஜீவன்கள் எல்லாம் அவனையும் அவன் தகப்பன் வீட்டையும் சேரும் என்ற‌ ஒரு உள் நோக்கத்தோடு அதை சொல்லுகின்றான் என்று அறிந்துகொள்ளுகிறோம். தீனாளுடைய சகோதரர்கள் தங்கள் தங்கை சீகேமால் அவமானப்பட்டதைக் கண்டு கொதித்தெழும்புகின்றனர். பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களும் ஒரு திட்டத்தை மறைவாகத் தீட்டுகின்றனர்!சீகேமின் திருமண ஒப்பந்தம் சம்ம‌திக்கப்பட வேண்டுமானால், அப்பட்டணத்தின் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொள்ள‌ வேண்டும் என்று ஒரு நிர்ப்பந்தம் வைக்கின்றனர். அதை அம்மனிதர் செய்து வேதனையில் இருக்கும்போது தீனாளின் சகோதரர் தாங்கள் திட்டமிட்டபடி சீகேம் உட்பட, அனைத்து ஆண்களையும் கொன்றுவிடுகின்றனர். பெண்ணுக்குத் தீங்கு இழைத்த ஒருவன் நிமித்தம் ஒரு பெருங்கூட்ட ஆண்களின் உயிர் பறிபோகின்றது.

நடத்தைகளும், அணுகுமுறைகளும்
பெண்களுக்கு ஆண்கள் இழைக்கும் தீங்குக்கும், கொடுமையான நடத்தைக்ளுக்குப்பின் ஒருவருக்கிருக்கும் பொல்லாத எண்ணங்களுக்கும் வேதம் எதிர்த்து குரல் கொடுக்கின்றது. வேதம் சொல்லுகின்றது: "முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 4:22௨24). எனவே மனித அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுகின்றது. நாம் கொடூரமாக நடக்க நிர்பந்தம் ஏற்படுகின்ற சூழல்களில் நம்மைத் தடுத்து ஆட்கொண்டு, நீதி நியாயத்தை நிலைநிறுத்துகிறவர் கிறிஸ்து. நம்மை பாவம் செய்யாமல் தடுத்துக் காப்பாற்றுகிறவர் அவரே.

நறுமணமும், துர்நாற்றமும்
தீனாள் தன் பின் நாட்களை இச்சையாலும் வன்மையாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக கழிக்க வேண்டியிருந்தது. அவள் தகப்பனாகிய யாக்கோபும், "இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்" என்று தன் குடும்பத்தின் மேல் வந்த அவமானத்திற்காக வருந்துகின்றான். மற்றவர்களுக்கு நறுமணத்தை வீச‌வேண்டிய இக்குடும்பம் துர்நாற்றத்தை வீசியது.

நறுமணம் வீசும் வாழ்வைக் குறித்த கருத்துக்களைக் கீழ்காணும் வசனங்களில் தெரிந்துகொள்ளலாம்: "கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்." (எபேசியர் 5:2) "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." (2 கொரி. 2:14 15).

இன்றைய வாலிபருக்கு இக்கதை ஒரு எச்சரிப்பின் சத்தமாக இருக்கின்றது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் (சங்கீதம் 119:1). வாலிபர் தங்கள் வழியை எதினால் சுத்தம்பண்ணுவார்கள்? வேத‌ வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே (வ.9). கிறிஸ்தவப் பெற்றோரும், சமுதாயமும் அன்பையும், கிறிஸ்துவைப் பற்றிய அறிவாகிய வாசனையையும் தங்கள் பிள்ளைகளுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் அளிக்கவேண்டும். "எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருக்கவேண்டும்" (சங் 144:12) என்பது நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.

Monday, March 2, 2015

அன்பற்றத் திருமண உறவுகள்

'நான் உன்னைத் திருமணம் செய்திருக்கக் கூடாது!' என்று கணவர், மனைவியர் ஒருவரையொருவர் பார்த்துக் கூறுவதுண்டு. சிலர் இன்னும் கடினமாக, 'உன்னைத் திருமணம் செய்ததற்குப் பதிலாக நான் இன்னாரைத் திருமணம் செய்திருக்கலாம்' என்று கூறுவதுண்டு. 'இது என் வாழ்வில் நடந்திருக்கவேக் கூடாது' என்னும் கூற்றை நம்மில் அநேகர் கூறியிருக்கக்கூடும். இப்படிப்பட்ட வார்த்தைகள் திருமண வாழ்வை நரகமாக்குகின்றது.  அன்பற்ற உறவுகளிலே நாம் என்ன செய்யக்கூடும்?

தான் விரும்பாத, அழகற்ற லேயாளை யாக்கோபு திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது. பாவம் லேயாள்! விரும்பப்படாத மனைவியாகவே அவள் வாழ்ந்தாள். பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், "புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தம், பூமி சஞ்சலப்படுகிறது" என்று நீதிமொழிகள் 30:23 சொல்லுகின்றது. யாக்கோபுக்கும் லேயாளுக்கும் இருந்த பந்தம், தான் முதன் முதலில் விரும்பிய அழகான ராகேலை திருமணம் முடித்தபிறகு இன்னும் மோசமடைந்தது. பதினான்கு வருடங்கள் ராகேலுக்காக அவன் உழைத்ததிலிருந்து இதை உணர்ந்து கொள்ளலாம். எவ்வாறாகத் தான் லேயாள் இந்த அன்பற்ற உறவை சமாளித்தாள்? அன்பற்ற உறவாயிருந்தாலும் பிள்ளைகளை அதிகமாக பெற்றுத் தள்ளிய லேயாளால் கணவனின் அன்பை பெற முடிந்ததா? ஒவ்வொரு குழந்தைக்கும் அவள் வைத்த பெயர்கள் மூலம் நாம் லேயாளிடமிருந்து சில காரியங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம்.

முதல் மூன்று குழந்தைகளுக்கு பெயரிடும் போது அவளுடைய கணவன் அவளிடம் அன்பு கூற வேண்டும், சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் பொருள்படும்படி பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:32-34). ஒரு திருப்பு முனையை அவளுடைய நான்காம் பிரசவத்தின் நேரத்தில் காண்கின்றோம். அப்பொழுதிலிருந்து ஆக்கப்பூர்வமான வார்த்தைகளைப் பேசத் துவங்கினாள். நான்காம் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, "இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" என்று சொல்லி யூதா என்று பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:35). கணவனுடைய அன்பை பெறுவதில் தோல்வியடைந்த சமயத்தில் அவள் ஆண்டவரைத் துதித்தது தான் அந்த சிறப்பான மனமாற்றம் ஆகும்.

இன்னும் ஒரு குழந்தையும் பெறாத ராகேலின் மன உளைச்சலையும் நாம் சிந்தித்துப் பார்க்க‌ வேண்டும். ஆனால் அவளிடமிருந்து ஒரு அழிவுப்பூர்வமான வார்த்தை வருகின்றது: "எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்" (30:1). அந்த நாட்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றின ராகேல் தன் வேலைக்காரியை யாக்கோபுக்குக் கொடுத்து அதன் மூலம் பெற்ற குழந்தைக்கு, "நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன்" என்ற பொருளில் பெயரிடுகின்றாள் (30:8). லேயாளும் அதே முறையைப் பின்பற்றி, "நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்" என்று பொருள்படும் பெயரை இடுகின்றாள் (30:13). " மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்" என்று நீதிமொழிகள் 18:21 கூறுகின்றது.  நம்முடைய‌ அன்பற்ற நிலைமைகளில் ஆண்டவரை நம்பி ஆக்கப்பூர்வம்மான வார்த்தைகளைப் பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். 

எனவே லேயாள், அடுத்த குழந்தைப் பிறந்த போது, "இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார்" (கனம் பண்ணுவார் என்று ஒரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது) என்று கூறுகின்றாள் (30:20). கணவனிடமிருந்து அவளுடைய எதிர்பார்ப்பு மாறி விட்டது. அன்பு திருமண வாழ்விற்கு முக்கியம் என்றாலும் நடைமுறையில் தேவைப்படுவது கனமும் மரியாதையும் அன்றோ?

ராகேலுக்கு அவள் எதற்கு அதிகம் ஆசைப்பட்டாளோ அதுவே அவள் உயிர் கொல்லியாக மாறிவிட்டது. "துக்கத்துடனே மகனைப் பெற்றென்" என்று பொருளுள்ள பென்யமீனைப் பெற்று விட்டு அப்பிரசவத்தில் மரித்து விடுகின்றாள் (35:18). அவளுக்கு அழகிருந்தது, கணவனின் அதிகமான அன்பு இருந்தது. ஆனால் குழந்தை பெறுவதில் பிரச்சனை இருந்தது.

விவிலியத்தின் நாட்களில் இறந்த பிறகு ஒருவரை அடக்கம் பண்ணும் இடம் அவருக்கு கனத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ராகேலை பிரயாணத்தில் வழியிலேயே அடக்கம் பண்ணும் சூழல் ஏற்பட்டது. ஆனால் லேயாள் அவள் கணவனான யாக்கோபோடே குடும்பக் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டாள். மட்டுமல்ல, நித்தியத்திலே லேயாளுக்கு  தன் மகனான லேவியின் மூலமாக அவள் இஸ்ரவேலின் பெருமை வாய்ந்த ஆசாரிய வம்சத்தாரின் தாயானதும், தன் மகனான யூதாவின் மூலமாக தாவீது வழி வந்த ராஜாக்களுக்கும் அவ்வழியே வந்த இயேசு ரட்சகரின் தாயானதும் தெரிய வந்திருக்கும். அன்பற்ற திருமண உறவில் எது நடக்கும், எது நடக்காது என்பதைக் கற்றறிந்த லேயாளுக்கு நித்தியத்தில் மிகுதியான பலன் கிடைத்தது.

தங்களுக்கு உள்ளதில் நிறைவாய் இருந்திருப்பது இருவருக்கும் சரியாய் இருந்திருக்கும்.  லேயாளுக்கு அழகும், அன்பும் கிடைக்கும் பாக்கியமில்லை. ஆனால் அவளுக்கு குழந்தைகள் பிறந்தன. கர்த்தர் மேல் அவள் பார்வை திரும்பியதிலிருந்து உண்மையான் அன்பு எது, உலக அன்பு எது என்பதை புரிந்துகொண்டு வாழ்வில் நிறைவாய் இருக்கக் கற்றுக் கொண்டாள். ராகேலுக்கு அழகு இருந்தது, கணவனின் அன்பு இருந்தது. ஆனால் வார்தையிலும், வாழ்விலும் நிறைவில்லை. பவுல் சொன்னது போல, "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்" என்று அன்பற்ற உலக உறவுகளில் ஆண்டவரின் அன்பில் திழைத்து நிறைவாய் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


மனிதர்களாகிய நமக்கு அன்பற்ற உறவுகளின் நிமித்தம் உணர்வுகளில் அதிகமான பாதிப்புகள் இருக்கக் கூடும். யார் நமக்கு நம் உணர்வுகளிலிலும், சிந்தைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும்? பவுல் இந்த இரகசியத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார். "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." (பிலிப்பியர் 4: 12-13) எனவே லேயாளைப் போல கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அன்பற்ற உறவுகளிலே அவரே நம்மை வாழ்வில் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழச்செய்வார்.