Saturday, March 21, 2015

நறுமணமா? துர்நாற்றமா? - நம் குடும்பங்களிலிருந்து...

நம் நாட்டிலுள்ள தற்போதைய சூழலில் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்றுத் திணறும் பெற்றோருக்கு வேதத்தில் ஆதியாகம் 34 ம் அதிகாரத்திலுள்ள தீனாளின் சரிதை பிள்ளைகளின் வாழ்வில் வேதம் எதிர்பார்க்கும் கலாச்சாரத்தைக் குறித்து வெளிச்சம் தருவதாக இருக்கின்றது. தீனாள் சீகேம் என்னும் பட்டணத்தில் அந்நிய தேசத்துப் "பெண்களைப்" பார்க்கத் தனியாகப் புறப்பட்டாள் என்று இங்கு காண்கின்றோம். எந்தப் பட்டணத்திலும் "பெண்கள்" மாத்திரம் இருப்பது இல்லை. யேகோவாவை வழிபட்டு வந்த அவளுக்கு சீகேம் பட்டணமானது விசுவாசத்திலும் கலாச்சாரத்திலும் முழுவதும் மாறுபட்ட இடமாகும்.

தீனாள், உயரிய‌ கீழ்படிதலுக்கு இலக்கணமான ஆபிரகாமின் கொள்ளுப்பேத்தி. ஆபிரகாமின் கீழ்படிதலால் அவன் மாத்திரமல்ல, அவன் வருங்கால சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை ஆதியாகமம் 12:1‍-3 ல் பார்க்கலாம். ஆபிரகாமின் சந்ததி பூமியிலுள்ளோருக்கு ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்றும், இவர்களை ஆசீர்வதிப்போர் ஆசீர்வதிக்கப்படுவர், சபிப்போர் சபிக்கப்பட்டிருப்பர் என்றும் வாசிக்கின்றோம். நாடோடிகளாயிருந்த ஆபிரகாமின் சந்ததியாரை அவரை சுமக்கும் கருவிகளாக இறைவன் வைத்திருந்தார் என்பது தான் உண்மை. அவர்களோடு சம்பந்தங்கலக்கும் யாவரும் யேகோவாவை அவர்கள் வாழ்விலிருந்து வீசும் நறுமணத்தின் மூலம் அறிந்துகொள்ளவேண்டும் என்பது அவரது திட்டம். இந்த சூழலில் தான் தீனாள் சீகேமிலிருக்கும் "பெண்களைப்” பார்க்கச் சென்றாள். அந்தப் பட்டணத்திலிருந்த சீகேம் என்னும் இளைஞன் அவளைத் தீட்டுப்படுத்தினான். தீனாள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை; அவள் யார் உதவியுமின்றித் தன்னைத் தான் காத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருக்கலாம். ஆனால் அது அவளால் முடியாமல் போனது!

தீர்மானங்களும், போராட்டங்களும்
நாமும் பல வேளைகளில் இப்பாவம் நிறைந்த உலகில் நம்மை நாமே காத்துக்கொள்ளலாம் என்று நினைத்துத் தவறிப்போனது தான் மிச்சம்! வாழ்வில் தவறுதலாக நாம் எடுக்கும் தீர்மானங்கள் மலை போன்ற போராட்டங்களுக்கு நேராய் நம்மைக் கொண்டுபோய்விடுகின்றது. அவிசுவாசியான ஒருவரோடோ, பலரோடோ சம்பந்தம் வைப்பது பற்றி வேதம் இவ்விதம் கூறுகின்றது: "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? விசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?" (2 கொரிந்தியர் 6:14-15) இந்நிலையில் நாம் சரியாகத் தெரிவுசெய்வதுக் குறித்து கர்த்தர் சொல்வது என்ன? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என்
கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” (சங்கீதம் 32:8). வேதமே நமக்கு வெளிச்சம்.

தீனாளைத் தீட்டுப்படுத்தினபின் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக அந்த வாலிபன் கூறினான். பாவம் தீனாள்! 23 ம் வசனத்தை நோக்குங்கால், அவன் தீனாளுடைய தகப்பன் வீட்டு ஆடுமாடுகள், ஆஸ்திகள், மிருகஜீவன்கள் எல்லாம் அவனையும் அவன் தகப்பன் வீட்டையும் சேரும் என்ற‌ ஒரு உள் நோக்கத்தோடு அதை சொல்லுகின்றான் என்று அறிந்துகொள்ளுகிறோம். தீனாளுடைய சகோதரர்கள் தங்கள் தங்கை சீகேமால் அவமானப்பட்டதைக் கண்டு கொதித்தெழும்புகின்றனர். பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களும் ஒரு திட்டத்தை மறைவாகத் தீட்டுகின்றனர்!சீகேமின் திருமண ஒப்பந்தம் சம்ம‌திக்கப்பட வேண்டுமானால், அப்பட்டணத்தின் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொள்ள‌ வேண்டும் என்று ஒரு நிர்ப்பந்தம் வைக்கின்றனர். அதை அம்மனிதர் செய்து வேதனையில் இருக்கும்போது தீனாளின் சகோதரர் தாங்கள் திட்டமிட்டபடி சீகேம் உட்பட, அனைத்து ஆண்களையும் கொன்றுவிடுகின்றனர். பெண்ணுக்குத் தீங்கு இழைத்த ஒருவன் நிமித்தம் ஒரு பெருங்கூட்ட ஆண்களின் உயிர் பறிபோகின்றது.

நடத்தைகளும், அணுகுமுறைகளும்
பெண்களுக்கு ஆண்கள் இழைக்கும் தீங்குக்கும், கொடுமையான நடத்தைக்ளுக்குப்பின் ஒருவருக்கிருக்கும் பொல்லாத எண்ணங்களுக்கும் வேதம் எதிர்த்து குரல் கொடுக்கின்றது. வேதம் சொல்லுகின்றது: "முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 4:22௨24). எனவே மனித அணுகுமுறைகளில் மாற்றம் தேவைப்படுகின்றது. நாம் கொடூரமாக நடக்க நிர்பந்தம் ஏற்படுகின்ற சூழல்களில் நம்மைத் தடுத்து ஆட்கொண்டு, நீதி நியாயத்தை நிலைநிறுத்துகிறவர் கிறிஸ்து. நம்மை பாவம் செய்யாமல் தடுத்துக் காப்பாற்றுகிறவர் அவரே.

நறுமணமும், துர்நாற்றமும்
தீனாள் தன் பின் நாட்களை இச்சையாலும் வன்மையாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக கழிக்க வேண்டியிருந்தது. அவள் தகப்பனாகிய யாக்கோபும், "இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்" என்று தன் குடும்பத்தின் மேல் வந்த அவமானத்திற்காக வருந்துகின்றான். மற்றவர்களுக்கு நறுமணத்தை வீச‌வேண்டிய இக்குடும்பம் துர்நாற்றத்தை வீசியது.

நறுமணம் வீசும் வாழ்வைக் குறித்த கருத்துக்களைக் கீழ்காணும் வசனங்களில் தெரிந்துகொள்ளலாம்: "கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்." (எபேசியர் 5:2) "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." (2 கொரி. 2:14 15).

இன்றைய வாலிபருக்கு இக்கதை ஒரு எச்சரிப்பின் சத்தமாக இருக்கின்றது. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் (சங்கீதம் 119:1). வாலிபர் தங்கள் வழியை எதினால் சுத்தம்பண்ணுவார்கள்? வேத‌ வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே (வ.9). கிறிஸ்தவப் பெற்றோரும், சமுதாயமும் அன்பையும், கிறிஸ்துவைப் பற்றிய அறிவாகிய வாசனையையும் தங்கள் பிள்ளைகளுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் அளிக்கவேண்டும். "எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருக்கவேண்டும்" (சங் 144:12) என்பது நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment