Tuesday, June 21, 2022

அனுபவ சாட்சியும், படிப்பினைகளும்

 


இலங்கை தேசம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, எங்கும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த கொந்தளிப்பான நேரத்தில் எனக்கும்  என் கணவர் சுரேஷுக்கும் அங்கிருந்து ஊழிய அழைப்பு வந்தது. இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியாவில் உள்ள எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் எங்களை வேண்டிக்கொண்டனர். ஒரு சமூக ஊடக இடுகையின் மூலம் கடவுள் எங்களுக்கு தூண்டுதலைக் கொடுத்தார். அதன் பிறகு நாங்கள் எங்கள் பிரயாணத்தை மேற்கொண்டோம்.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, உள் இடங்களுக்குச் செல்லும் அசௌகரியமான பயணம் போன்றவற்றில் மக்கள் படும் வேதனைகளையும் துன்பங்களையும் நாங்களும்  அனுபவித்தோம். இவை அனைத்தையும் தேவ தயவால் மேற்கொண்டு, அத்தீவு தேசத்தில் ஊழியத்தில் நற்பலன்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் உறவினர்களில் ஒருவரான ஆங்கிலிக்கன் பாதிரியார் ஒருவர் வந்து எங்களை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஏப்ரல் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலைப்பாங்கான இடத்தில் உள்ள அவரது தேவாலயத்தில் நாங்கள் பேசுவதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் காரணமாக எங்களால் அவரது இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

கர்த்தர் எங்களுக்கு ஒரு மாற்று திட்டத்தை வைத்திருந்தார். இலங்கையில் எங்கள் கூட்டங்களின் போது நாங்கள் சந்தித்த ஒரு போதகர் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள அவரது தேவாலயத்தில் இரண்டு ஆராதனைகளில் பிரசங்கிக்க எங்களை அழைத்தார். என் கணவர் முதல் ஆராதனையில் பிரசங்கம் செய்துவிட்டு, வேறொரு சபைக்குச் சென்று அங்கும்  தேவ செய்தி அளித்தார். அங்கே போதகரின் மனைவி உட்பட பலரது இதயங்களை கர்த்தர் அன்று உயிர்ப்பித்தார். நான் முதல் சபையில் இரண்டாவது  ஆராதனையில் பிரசங்கித்த பிறகு, இறை வார்த்தைகளைக் கேட்டு மக்கள் எப்படி தொடப்பட்டார்கள் என்று சொன்ன போது தேவன் மகிமைப்பட்டார். மக்கள் குணமடைய பிரார்த்தனைகளையும் ஏறெடுத்தேன். அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையாக அமைந்தது.

 இதற்குப் பிறகு நாங்கள் இருவரும் போதகரின் குடும்பத்துடன் ஒரு ஹோட்டலில் உணவுக்காக சென்றோம். சாப்பிட்டு மகிழ்ந்தோம்.  அப்போது என் கணவர் கை கழுவச் சென்றபோது, ​​திடீரென மூர்ச்சை அடைந்தார்.  மூளையதிர்ச்சி போல் இருந்தது. எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் வந்தது.

போதகரின் குடும்பத்தினர் மற்றும் ஹோட்டலில் இருந்த உதவும் உள்ளம் கொண்ட அந்நியர்களின் உதவியோடு என் கணவரை டாக்ஸியில் ஏற்றிச் சென்றோம்.  ஞாயிற்றுக் கிழமை ஆனதால் கிளினிக்குகள் மூடப்பட்டிருந்தன. இறுதியாக, இரண்டு செவிலியர்கள் இருந்த ஒரு கிளினிக்கிற்கு என் கணவரை தூக்கிச் சென்றோம்.  அப்போது என் கணவருக்கு சர்க்கரை அளவு 600க்கு மேல் இருந்ததை கண்டுபிடித்தனர். காலையில் உணவு உண்ணாமல் இருந்ததன் விளைவும், அன்றைய தினம் அவர் சர்க்கரை மருந்துகளை எடுக்காமல் இருந்ததும் காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்தேன்.

முந்தைய நாட்கள் பரபரப்பாகவே இருந்தது. அந்த சனிக்கிழமை இரவும் என் கணவர் ஒரு மணி நேரம் மாத்திரமே தூங்கி இருந்தார். அவர் பிரசங்கித்த இரண்டாவது தேவாலயத்தில் கரண்ட் இல்லாததால், அவர் அதிகமாக வியர்த்து, நீரிழப்புக்கு ஆளானார். இருந்தாலும் நல்ல மருத்துவமனை கிடைக்கவும், முறையான சிகிச்சை கிடைக்கவும் கடவுள் வழி நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருந்தேன். நான் என் வாயைத் திறந்து சத்தமாக ஜெபித்துக்கொண்டே இருந்தேன். அப்பொழுது டாக்ஸி கொழும்பில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை முன் நின்றது. அவருக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.


சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவருக்கு மூளையில் சிறிய ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்று கூறினார்கள். அவரை அழைத்து வர தாமதித்திருந்தால் அவர் கோமா நிலைக்குச் சென்றிருக்கலாம் என்றும் கூறினர். ஐசியூவில் அவர் கண்காணிக்கப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் பிரார்த்தனைகளை கர்த்தர் கேட்டார். ஆஸ்பத்திரியில் எனக்கு ஒரு தனியான தருணம் அமையவே இல்லை. அந்த அந்நிய தேசத்தில் எப்போதும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நான் சூழப்பட்டிருந்தேன். எங்கள் மகன், கிஃப்ட்சனும் இந்தியாவிலிருந்து வந்து, மகிழ்ச்சியுடன் மூவருமாக இந்தியாவுக்குத் திரும்பினோம்!


எங்களது ஊரான கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட  தொடர் மருத்துவப் பரிசோதனையில் கணவரின் உடல்நிலை சரியாக இருப்பதாகத் தெரியவந்தது. உடனடியாக இந்தியாவின் நாக்பூரில் நடந்த ஒரு வேதாகம மொழிபெயர்ப்புப் பட்டறையிலும் கலந்துகொண்டோம். வேலூர் CMC-யில் இன்னும் சில மருத்துவ ஆலோசனைகளையும் தொடர்ந்து இறைபணி செய்வதற்கான ஊக்கத்தையும் பெற்றோம்.

கர்த்தர் நல்லவர், எந்த சூழலிலும் அவர் நல்லவர். இந்த அனுபவ சாட்சியின் மூலம் எங்களது கற்றல் மற்றும் எச்சரிக்கைகளில் சிலவற்றை இங்கே தருகிறேன்:

1.  இந்த சடிதியான சுகவீனத்திற்கு ஒரு முக்கிய காரணம் எங்கள் வீட்டில் இருந்த ஒரு பிழையான சர்க்கரை மானிட்டர். இதில் பயன்படுத்தப்பட்ட கீற்றுகள்(strips) காலாவதி தேதியை கடந்துவிட்டன. அது எப்போதிலிருந்து தவறான எண்ணிக்கைக் காட்டியது என்பது எங்களுக்குத் தெரியாது. இலங்கைக்கு செல்வதற்கு முன் என் கணவர் தனது சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதி மகிழ்ச்சியாக இருந்தார். அது உண்மையல்ல. அதே பிழையான எண்ணை வீட்டுக்கு வந்த பிறகும் காட்டும் போது தான் தவற்றை உணர்ந்தோம்!

2. வீட்டிற்கு வெளியே நீண்ட தினங்கள் தங்கியிருக்கும் பிரயாணங்களின் போது சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது அளவிட இந்த மானிட்டர்களை எடுத்துச் செல்வது நல்லது.

3. சரியான ஓய்வும், உறக்கமும் கட்டாயம் அவசியம்.

4. என் கணவர் தனது சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்து, அங்குள்ள வெப்பமான தட்பவெப்பநிலையின் காரணமாக குளிர்ந்த சர்க்கரை அதிகமுள்ள சோடாக்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை அதிகம் பருகினார். குளிர்ந்த நீரை பருகியிருக்கலாம்.

5. சரியான வேளையில் உணவு மற்றும் சரியான வேளைகளில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்

 இப்போது எங்கள் ஊழிய பயணங்களை ஞானமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இளம் ஊழியர்களை பயிற்றுவிக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் எங்கள் அன்பும் பிரார்த்தனைகளும்!

 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்? நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகளெல்லாவற்றினின்றும் காக்கப்படுவான்.  (பிரசங்கி 7:16-18)

No comments:

Post a Comment